Monday, October 22, 2012

Sri Kaliamman Kavacham - ஸ்ரீ காளியம்மன் கவசம்

Picture Courtesy :- Google Image


ஸ்ரீ காளியம்மன் கவசம்
(எல்லாக் காலங்களையும் வென்றவள் காளி. காளி, கரால வதனா, உதிரப்பிரியா, முண்டமாலா, ஜெயந்தி, பத்ரகாளி, கபாலினி, சாமுண்டா என்ற திரு நாமங்கள் காளி தேவியின் திருவருள் கூட்டி வைப்பவை. காளியை உபாசனை செய்பவர்களுக்கு புனர்ஜென்மம் கிடையாது. பிறப்பில்லா பெருவாழ்வு  தரும் காளியின் அருள் பெற்றவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். உலகம் யாவும் நிரம்பிய புகழைத் தருபவள் அவள். பக்தர்கள் மீது பாசமும், பற்றும் கொண்டு அளவற்ற கருணை செய்பவள். கடலைப் போன்றது அவள் அருள். "நீள்கடலாய் நீலவண்ண நீர்மையளாய் தாள்பிடிப்பார் தாபமறத் தாயாகி வந்ததுவும் வாள் பிடித்த காளியவள் வாரிதியாய் வந்திட்டாள்" என்று அவள் புகழ் பேசப்படுகிறது. காளியைப் பூஜிப்பவர்கள் புண்யசாலிகள். அவர்களைத் தீமைகள் அணுகாது. இக்கவசத்தைப் படிப்பவர்களும், படித்துக் கேட்பவர்களும், மேன்மைகள் பலவற்றை அடைவார்கள் என்று சிவசார்யர்  குலபூஷணம் சாம்பமூர்த்தி சிவாசார்யர் சொல்கிறார்.)

ஜெயந்தி மங்களா காளி பத்ரகாளி கபாலினி துர்க்கா
க்ஷமா சிவா தாத்ரி ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே

காப்பு
மங்களத்தைப் பெருக்கிடவே மலரேறி வந்தவளின்
செங்கமலச் சேவடியைச் சேர்
பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிகொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிவிதியும் ஓடிவிடும் பலவலிமை கூடிவரும்
மதிமலர்ந்த வாக்குவரும் மங்களமே மிக்குவரும்

கவச நூல்
அருள்வீச அம்பிகையே அன்பர்மன இன்னமுதே
இருள் நீக்கு இளவெயிலே இனியசுவை வானமுதே
பொருள்கூட்டு பொன்மணியே பொங்குவரு கங்கையளே
மருள்போக்கு மங்கையளே மங்கையளே காளியம்மா    1

வாழ்வருளும் தேவியளே வானவர்க்கும் தாயவளே
கூழ்விரும்பும் கூளியுடன் கூடிவரும் கூர்மதியே
பாழ்படுத்தும் வைப்பொழித்துப் பாடிவரும் பார்மகளே
வீழ்த்தவரு ஏவலதை: வீசிமிதி வீரியளே     .2.

என்மனதில் பீடமிட்டு என்னாளும் நின்றிடவே
பொன்னிமயம் விட்டு இன்று பொலிவோடு வந்தவளே
இன்முகத்து எம்மணியே இனியுன்னை விட்டுவிட்டு
பொன்தேடப் போவதிலும் பொருளுண்டோ காளியம்மா   3

காரமிகும் மிளகாயும் காய்ந்த உப்பும் சேர்ந்தபொதி
கால்வழியில் ஒளிந்திருக்க காணாமல் மிதித்துவிட்டேன்
வீரமிகும் காளியம்மா வீதிவழி காத்திடவே
பூரமெனும் ஓரையிலே பூரணையே வந்திடுவாய்        4

இடையூறு போவதற்கே இன்முகத்துக் காளியம்மா
எழுஎட்டுத் திதிவந்து எங்களையே காத்திடுவாய்
கடைபோட்ட மந்திரத்தார் கன்மனத்து ஓதலினால்
உடைபட்டுப் போகாமல் எம்கதியைக் காத்திடுவாய்    5

பதினெட்டுக் கரமுடைய பகவதியே பகவதியே
நிதிசொட்டத் தாமரையில் நிற்கின்ற நித்தியளே
பதிகாக்கச் சிவயநம பலநாளும் செபிப்பவளே
சதிரிட்ட சங்கரியே சண்முகனின் தாயாரே        6

தாயுடனே மக்களையும் தாரமுடன் கணவனையும்
நேயமுடன் ஒன்றாக்கி நேர்வழியில் செல்பவளே
காயாகி கனியாகிக் கானகத்தே நின்றவளே
மாயாவ தாரியென மாநிலத்தில் வந்தவளே     7

வந்திருக்கும் உன்னடியில் வளமான பூவுமிட்டு
சந்தனமும் பூசிடுவேன் சந்தமொடு பாடிடுவேன்
சொந்தமென நீயிருக்க சொக்கிவரும் மூவுலகம்
பந்தமிட்ட தீயொலிகள் பயந்தெங்கோ ஓடிவிடும்   8

ஓடிவிடும் ஓடிவிடும்  ஓதிவைத்த மாயமதும்
பாடிவரும் இக்கவசம் பார்முழுதும் காத்திருக்கும்
சூடிவரும் கவசமிதால் சுந்தரியே சொக்கியேன
நாடிநிதம் ஏத்திடுவேன் நாகினியே நாரணியே   9

நாரணனார் முன்னவளே நானேயாய் நின்றவளே
காரணத்தைக் கேளாமல் காத்திடவே வந்தவளே
மாரணமாம் மந்திரத்தால் மாயமிடும் சாம்பல‌தை
வாரணையாய் கைநீட்டி வையத்தில் சிரிப்பவளே   10

சிரிப்பவருக்கு எரிதீயாய்ச் சினத்தோடு நிற்பவளே
கரிக்கின்ற பேர்களுக்கு கடுகுவெடி முகத்தாளே
தரிக்கின்ற இதயமலர் தங்குகின்ற குணத்தாளே
நரிநகத்துக் குடமாயம் நசியவென நகைப்பவளே    11

நகையாகிப் பாம்பணிந்து நடுவானில் நிற்பவளே
பகைகாண விழிசுற்றிப் பலஉலகம் பார்ப்பவளே
புகைவண்ண மேனியளே புண்ணியமாம் ஞானியளே
தொகைகாண தனமளித்துத் தொழுமுன்னே காப்பவளே  12

காப்பவளும் நீயேதான் கார்த்திகையில் பரணியளே
மாப்பண்டப் படையலுக்கு மாநிதியம் தருபவளே
காப்பணிந்த மஞ்சளொடு காண்பதற்கு வருபவளே
நாப்பணிந்து ஏத்துதற்கு நான்மறையே தந்தவளே    13

கிலிங்கார வித்தெடுத்துக் கிழக்குவயல் விதைத்தவர்க்கு
நலிநீக்கி நல்விளைவை நன்மொழியே தந்திடுவாய்
சௌபாக்ய பீஜத்தில் சௌந்தரத்து நாயகியே
ஸௌஎழுக என எழுப்பும் சௌரியளே சூலியளே    14

துர்க்கையென நிற்பவளே துந்துபியில் மகிழ்பவளே
துயரத்தைத் துடைப்பவளே துணைமகளே ஸ்ரீங்காரி
அர்ச்சனையில் அகமகிழும் அரியவளே ஐம்தேவி
பர்வதத்துப் பனிமகளே பயமோட்டும் கீலீங்காரி    15

கால்வலியும் தலைவலியும் காலத்தின் நோய்வலியும்
மார்வலியும் மாபிணியும் மாயாத தரித்திரமும்
பால்காட்டிப் பாம்புவிடும் பாவையதின் கூத்தடிப்பும்
சேல்விழியே நீவந்தால் சீக்கிரத்தில் ஓடிவிடும்     16

எமைநோக்கித் தீங்கிழைக்க எய்தஒலி கால்நடுங்க
தமைவிட்ட தரித்திரத்தான் தனிவில்லை ஒடித்துவிடும்
உமையென்றும் மறவாத உத்தமர்க்கு மங்களத்தை
உள்ளபடி வட்டியிட்டு உயர்வாக்கி நீ தருவாய்      17

நீ தருவாய் செல்வாக்கு நீள்நிதியம் ஆயுளதை
நீ தருவாய் பெரும்வெற்றி நீங்காத நல்திலகம்
நீ தருவாய் மனவுறுதி நீலிஎழு மந்திரமும்
நீ தருவாய் மஞ்சளுமே நீள்சூலக் காளியம்மா    18

காளியம்மன் கவசத்தைக் காலையில் சொல்லிவரின்
காலபயம் ஏதுமில்லைக் காவலென நின்றிடுவாள்
தூளியெனும் நீறெடுத்து தூபத்தில் அகலுமிட்டு
தூதாக கவசமிட்டால் தூரத்துப் பகையோடும்   19

அட்டமியாம் மாலையில் அவளுக்குப் பூமுடித்து
கட்டத்தைச் சொல்லிவிடின் கருணைக்குப் பஞ்சமில்லை
நட்டவிதை விளைவாக நல்லபதி னொன்றினிலே
தட்டின்றிப் பாடிவரின் தயவுக்கும் பஞ்சமில்லை  20

மங்களத்து வாரமதில் மங்கையர்கள் ஒளியேற்றி
மங்களையைப் பாடிவரின் மங்கல்யம் கூடிவிடும்
செங்கயலின் பூவெடுத்து சென்மஓரை நாளதினில்
நங்கையளின் அடிபணிய நன்மைவரும் தன்மைவரும் 21

பூரணையாம் நாளதனில் பூத்திருக்கும் மல்லியினைக்
காரணிக்குப் போட்டுவரின் காலமெலாம் மணமாகும்
சூரமிகு சூரியனே சூளுரைக்கும் சூலியளே
சாரதையே சாமியளே சாம்பலணி சாம்பவியே    22

மூலமுறை ராசியினில் மூவேளை பாடியிதை
மூலமாம் மந்திரமே முன்பின்னும் ஜெபித்துவரின்
காலத்தால் பஞ்சமது காத்திருந்து சேராது
கோலமாம் குதிரையிலே கோலோச்சி வருபவளே   23

தரிசனத்துத் தேவியளே தருமநிதி தருபவளே
பரிக்கிழத்தி வசியவசி பார்முழுதும் வசியவசி
கரிசேறும் கனகையளே கண்ணான கண்மணியே
கரிகைமண  நெற்றியளே கனதனமே தருமகளே    24

காளியம்மா காளியம்மா காணவரும் காளியம்மா
காளியம்மா காளியம்மா காலமெல்லாம் காருமம்மா
காளியம்மா காளியம்மா காளியம்மா வாருமம்மா
காளியம்மா எம்தாயே காளியம்மா காளியம்மா   25

பதினெட்டுக் கரமுடைய பகவதியாம் காளியம்மன்
நிதிசொட்டும் கவசமிதை நித்தமுமே பாடிவரின்
பதிகிட்டும் வலிகிட்டும் பதிவிதியும் விலகிவிடும்
மதிகிட்டும் மணத்துடனே மங்களமே கூடிவரும்   26

மங்களத்துக் காளியளே மன்னவளே என்நிதியே
மங்களத்துக் காளியளே மணமலரே என்புகழே
மங்களத்துக் காளியளே மங்கலியக் குங்குமமே
மங்களத்துக் காளியளே மதுரமது காளியளே    27

ஓம் க்லீம் ஸ்ரீம் க்லீம் காளி மாகாளி
என் மனத்திலும் முகத்திலும் நிற்கவே ஸ்வாஹா

========================================================================

4 comments:

Unknown said...

Om kali na ma

Unknown said...

Om kaali jai kaali

Unknown said...

🙏🙏🙏🙏🙏

Sudarsan said...

This wonderful stotra with very effective prayogas has been divined by Upasana Kulapathi Sri Durgai Siddhar, a Saint who lived in contemporary times.

Post a Comment