Thursday, December 12, 2013

Ekadashi Vrat Mokshada Ekadashi - ஏகாதசி விரத கதை மோக்ஷ்தா ஏகாதசி

Mokshadha Ekadhasi 
Mokshadha Ekadhasi


The Ekādhaśī that occurs during the light fortnight of the month Mārgaśira (November-December) is the Mokshadha Ekadhasi.

Mokshada Ekādhaśī is special in two regards;
  1. It was the auspicious day on which Lord Śrī Kṛṣṇa spoke the Śrīmad Bhagavad Gītā to Arjuna on the battlefield of Kuruketra, at the place now known as Jyotisar Tirtha.
  2. Anyone who gifts a Bhagavad Gītā away to a deserving person on this day is bestowed profuse blessings by the Śrī Kṛṣṇa Bhagavān.
  • This Ekādhaśī purifies the faithful devotee of all sinful reactions and bestows liberation upon him.
  • By the influence of this fasting merit, one’s forefathers, mothers, sons, and other relatives who have gone to hell by chance can turn around and go to the heavenly kingdom.
  • Puranas tell that this Ekadhasi burns several million sins to ashes. Also gives the merit of performing Ashwamedha yaagam by hearing the Vrat Mahima Story.
Courtesy:- http://madhwasaints.wordpress.com 

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே



மோக்ஷ்தா ஏகாதசி
(மார்க்கசீர்ஷ மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)
டிசம்பர்  மாதம் 13 ம் தேதி, வெள்ளிக்கிழமை, மார்க்கசீர்ஷ மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோக்ஷ்தா ஏகாதசியாக‌ கொண்டாடுவர்.  மோக்ஷ்தா ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

உத்பன்ன ஏகாதசியின் தோற்றம், மகிமை, மஹாத்மியம் இவற்றைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்த‌ அர்ஜூனன்," தேவர்களாலும், தெய்வங்களாலும் பூஜிக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணா !,  மூவுலகத்தையும் காத்து ரட்சிக்கும் அருளே ! தாங்கள் அனைவருக்கும் சுகம் மற்றும் மோக்ஷத்தை தரக்கூடியவர், தங்களுக்கு என் நமஸ்காரங்கள் !, ஹே தேவாதி தேவா!, தாங்கள், அனைவருக்கும் நன்மையை விரும்பும் தாங்கள் கருணையுடன் என் மன சஞ்சலத்தை நீக்கி சாந்தியை அளிக்க வேண்டுகிறேன்." என்றான். 

அர்ஜூனனின் கோரிக்கைக் கேட்டு ஸ்ரீகிருஷ்ணர்," அர்ஜூனா!, நீ எதைப் பற்றி அறிய விரும்பினாலும், தயக்கமில்லாமல் கேள். நான் கட்டாயம் உன் மன சஞ்சலத்தை நீக்கி சாந்தியை அளிப்பேன்" என்றார்.

ஸ்ரீ ஹரி! மார்க்கசீர்ஷ கிருஷ்ணபட்ச ஏகாதசி தோன்றிய விவரம், அன்று விரதம் இருப்பவர்கள் பெறும் பலன், அதன் மகிமை ஆகியவற்றைப் பற்றி தாங்கள் கூறியதை அறிந்து என் மனம் மிகவும் சாந்தியைப் பெற்றது. நான் அதே மார்க்கசீர்ஷ மாதத்தில் வரும் சுக்லபட்ச ஏகாதசியைப் பற்றி விவரமாக அறிய விரும்புகிறேன், அதன் பெயர், அன்று எந்த தெய்வத்தை பூஜிக்க வேண்டும், விரத விதிமுறைகள் மற்றும் அன்று விரதம் இருப்பதால் கிட்டும் பலன்கள் இவற்றைப் பற்றி விஸ்தாரமாக அறிய விரும்புகிறேன். தாங்கள் தயைகூர்ந்து என் மனதின் வினாக்களுக்கு விவரமாக பதிலளிக்க வேண்டுகிறேன்." என்றான். (उत्सुकता - desire) 

ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு பதிலளிக்கையில்,"குந்திபுத்ரனே!, மிகவும் உத்தமமானதும், வாழ்க்கைக்கு இன்றியமையாததும் ஆன  கேள்வியை நீ கேட்டுள்ளாய். இதனால் உன் கீர்த்தி இவ்வுலகெங்கும் பரவும்.  மோக்ஷதா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படும் மார்க்கசீர்ஷ மாத சுக்லபட்ச ஏகாதசி அநேக பாபங்களை அழிக்கக்கூடிய சக்தி பெற்றது. அன்று பகவான் தாமோதரருக்கு பக்தி பூர்வமாக, தூப, தீபம், நைவேத்யத்துடன் பூஜை செய்ய வேண்டும்.  இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்துப் பெறும் புண்ணிய பலனின் பிரபாவத்தால் நரகம் சென்ற தாய், தந்தை, பித்ருக்கள், நரகத்திலிருந்து விடுதலை பெற்று ஸ்வர்க்கலோகம் சென்றடைவர். புராணத்தில் இதைப் பற்றிய ஒரு கதை உண்டு. அதை உனக்குச் சொல்கிறேன். கவனமாகக் கேள்" என்றார்.

பழங்காலத்தில் வைகானஸ் என்னும் பெயர் கொண்ட ராஜா ஆட்சி புரிந்து வந்தான். அவன் ராஜ்ஜியத்தில் நான்கு வேதமும் நன்கறிந்து பாண்டித்யம் பெற்ற பிராம்மணர்கள் வசித்து வந்தனர். தன் ராஜ்ஜியத்தின் பிரஜைகளை, வைகானஸ், தன் புத்ரர்கள் போல பாதுகாத்து ரட்சித்து வந்தான். ஒரு நாள் இரவு, அவன் கனவில், தன் பித்ருக்கள் நரகத்தில் வேதனை அனுபவிப்பதைக் கண்டான். அக்கனவினால் வருத்தமுற்று ராஜன் மிகவும் மனம் கலங்கினான். அதற்குப் பின் நித்திரை வராமல், காலை சூரிய உதயத்திற்காக காத்திருந்தான். காலை சூரிய உதயமானவுடனே, பிராம்மணர்களை அரண்மனைக்கு வரவழைத்து தான் கண்ட சொப்பனத்தைப் பற்றி கூறினான்.

"ஹே பிராம்மண தேவர்களே!, நேற்று இரவு நான் என் பித்ருக்கள் நரகத்தில் வேதனை அனுபவிப்பதாக கனாக் கண்டேன். அவர்கள் என்னிடம்," மகனே, கோரமான இந்நரகத்தில்  தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை இந்நரக வேதனையிலிருந்து விடுவிப்பாயாக" என்றனர். அவர்களின் கூக்குரலைக் கேட்டதிலிருந்து என் மனம் நிம்மதி இன்றி உள்ளது.  என் மூதாதையர்களின் துக்க நிலைமையைக் கண்டு எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. இந்த ராஜ்யம், சுகபோகம், ஐஸ்வர்யம், யானை, குதிரை, மனைவி, மக்கள் என்று எதுவும் எனக்கு ஆனந்தம் அளிப்பதாக தோன்றவில்லை. இந்நிலைமையில் நான் என்ன செய்வேன்?.  எங்கு செல்வேன்? இந்த துக்கத்தின் காரணமாக என் சரீரம் தகித்துக் (तप heat) கொண்டிருக்கிறது. தாங்கள் அறிந்த ஞானத்தால் என் பித்ருக்கள் நரகத்திலிருந்து முக்தி பெற்று சுவர்க்கலோகப் பிராப்தி பெற, தவம், தானம், விரதம் என்று  சரியான ஒரு உபாயத்தைக் கூறுங்கள். என் பிதா மற்றும் பித்ருக்கள் நரகத்திலிருந்து விடுதலை பெற நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் நான் வாழும் இந்த அர்த்தமில்லா வாழ்க்கையில் எவ்வித பிரயோசனமும் இல்லை.  ஒருவருடைய பிதா மற்றும் பித்ருக்கள் நரகத்தில் வேதனையில் தவிக்கும் போது, புவியில் சுக, போக வாழ்க்கை வாழ்வதற்கு அவருக்கு நிச்சயம் எவ்வித உரிமையும் இல்லை. ஆகையால் பிராம்மண தேவர்களே!, சீக்கிரம், இதற்கான உபாயத்தை எனக்குக் கூறுங்கள்." என்றான்.

ராஜாவின் இத்தகைய நிராசையான துக்கம் நிரம்பிய வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, ஒருமித்த மனதோடு ராஜனை நோக்கி, " ராஜன்!, நமது ராஜ்ஜியத்தின் மிக அருகில் முக்காலமும் அறிந்த ஞானவான், பர்வத் என்னும் பெயர் கொண்ட முனிவர் ஒருவர் இருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று தங்களை வாட்டி வதைக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு கேட்டால், நிச்சயம் அவர் உங்களுக்கு ஒரு சரளமான உபாயத்தை அருளுவார்." என்றனர்.

இதைக் கேட்டதும் ராஜா வைகானஸ் முனிவரின் ஆசிரமத்தை சென்றடைந்தான். அங்கு மனச்சாந்தியுடன் அநேக யோகிகளும், முனிவர்களும் தவத்தில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டான். நான்கு வேதங்களிலும் நிபுணத்துவம் பெற்ற முனிவர் பர்வத்,  நீண்ட நெடுந்தவத்தின் காரணத்தால் உண்டான தேஜஸ் ஜொலிக்க, மற்றொரு பிரம்மாவைப் போல் அமர்ந்திருப்பதைக் கண்டான்.  ராஜன் அவரிடம் சென்று சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, பின்னர் தன்னைப் பற்றிய விவரத்தையும் பர்வத முனிவருக்குச் சொன்னான். முனிவரும் ராஜனிடம் க்ஷேமநலத்தைப் பற்றி விசாரிக்கும் பொழுது, ராஜன் அவரிடம்," ஹே தேவரிஷி! தங்களின் கருணையால் என் ராஜ்ஜியத்தில் எல்லா சந்தோஷங்களும் நிறைந்து இருக்கின்றன். ஆனால் திடீரென்று எதிர்பாராமல் என் முன் ஒரு பிரச்னை தோன்றிய நாளிலிருந்து மன அமைதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்." என்றான். பிறகு ராஜன் முனிவரிடம் தான் இரவில் கண்ட கனவைப் பற்றிய விவரத்தைக் கூறி, துக்கம் தொண்டையை அடைக்க கம்மிய குரலில்," மஹாமுனிவரே!. என் மீது கருணை கொண்டு, இப்பொழுது தாங்கள் தான் எனக்கு மார்க்கதரிசனத்தை காட்டி அருள வேண்டும். இச்சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி என் பிதா மற்றும் பித்ருக்களை அவர்களின் நரக வேதனையிலிருந்து விடுதலை அளிப்பது?" என்று வினவினான்.

ராஜாவின் பிரச்னையை மிகவும் கவனத்துடன் கேட்டறிந்ததும், பர்வத முனிவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து கடந்த காலம் மற்றும் வருங்காலம் இரண்டிலும் நடந்தவற்றையும், நடக்கப்போவதையும் அறிந்து ஆழ்சிந்தனைக்குப் பின் கண்களைத் திறந்து ராஜனை நோக்கி," ராஜன், தவயோக சக்தியால் நான் உன் பிதாவின் சகல தீய கர்மவினைக‌ளைப் பற்றி அறிந்தேன். அவர் தன் முன் ஜென்மத்தில் தனது மனைவியரிடத்தில் பாகுபாடு கண்டு வாழ்ந்தார். மஹாராணியின் வசத்தில் ஆழ்ந்து அவர் வார்த்தைக்களைக் கேட்டு இரண்டாவது மனைவி ருது தானம் கேட்ட பின்னரும் கொடுக்கவில்லை. இத்தீவினையால் விளைந்த பாபத்தால் உன் பிதா நரகத்தில் உள்ளார்." என்றார்.

"ஹே மஹாத்மா, என் பிதா மற்றும் பித்ருக்களை நரகத்திலிருந்து முக்தி அளிக்கும் உபாயத்தையும், இப்பாபத்திலிருந்து விமோசனம் பெறும் மார்க்கத்தையும் தாங்கள் தான் அருள வேண்டும்." என்று முனிவரிடம், ராஜா வைகானஸ் யாசிக்கும் குரலில் வேண்டுக்கோள் விடுத்தான்.

அதைக் கேட்டு பர்வதமுனிவர், " ராஜன்!, மார்க்கசீர்ஷ மாதம், சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதி மோக்ஷ்தா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இது மோட்சத்தை அளிக்கக்கூடியது. நீ அன்று விதிமுறைகளின் படி ஏகாதசி விரதத்தை உபவாசம் இருந்து கடைப்பிடிக்கவும். விரதத்தை நல்லபடி முடித்து, அவ்விரத புண்ணியபலனை சங்கல்பம் செய்து உன் பிதா மற்றும் பித்ருககளுக்கு அர்ப்பணிக்கவும். ஏகாதசி விரத புண்ணிய பலனின் பிரபாவத்தால், நிச்சயம் உன் பிதா மற்றும் பித்ருக்கள் நரகத்திலிருந்து முக்தி அடைந்து சுவர்க்கப்பிராப்தியை அடைவர்." என்றார்.

முனிவரின் வார்த்தைகளின் படி, ராஜா வைகானஸ் தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பி, தன் குடும்பத்தார் சகிதம் மோக்ஷ்தா ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக உபவாசத்துடன்  கடைப்பிடித்தான். பின்னர், தான் பெற்ற அப்புண்ணிய பலனை தன் பிதா மற்றும் பித்ருக்களுக்கு அர்ப்பணித்தான். ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனால், ராஜனின் பிதாவும், பித்ருக்களும் நரகத்திலிருந்து முக்தி அடைந்தனர். ஸ்வர்க்கம் செல்லும் வழியில் ராஜா வைகானஸை நோக்கி," மகனே, உனக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும்." என்று ஆசீர்வதித்து ஸ்வர்க்கத்தை அடைந்தனர். 

"ஹே அர்ஜூனா ! எவர் ஒருவர் மார்க்கசீர்ஷ மாதம், சுக்லபட்ச ஏகாதசியான மோக்ஷ்தா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கிறாரோ, அவரின் சகல பாபங்களும் நீங்கி, முடிவில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுகிறார். இதைவிட உத்தமமான, சிறந்த மோட்சப்பிராப்தியை தரக்கூடிய விரதம் வேறு எதுவும் இல்லை. இந்த ஏகாதசி விரத மஹிமையை கேட்பவரும், படிப்பவரும் அநேக நன்மைகளை அடைவர். இவ்விரதம் மோட்சத்தை அளிக்கக்கூடிய சிந்தாமணியை போன்றது. இவ்விரதத்தின் புண்ணிய பலன், விரதம் அனுஷ்டிப்பவரின் அனைத்து மனோபீஷ்டங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய சக்தி பெற்றது."

" ஹே அர்ஜூனா! ஒவ்வொரு மனிதரும், மோட்சப்பிராப்தி பெற வேண்டும் என்று விரும்புவர். அப்படி மோட்சப்பிராப்தியை பெற விரும்புவர்களுக்கு மோக்ஷ்தா ஏகாதசி விரதம் மிகவும் மகத்துவம் நிரம்பிய‌ விரதமாகிறது. தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையை இந்த ஏகாதசி விரதக் கதை வலியுறுத்தி கூறுகிறது. பகவான் ஸ்ரீஹரியால், பக்தர்களை சம்சார சாகரத்திலிருந்து உய்விக்க அருளப்பட்ட ஏகாதசி விரதத்தை மிகவும் நிஷ்டையுடனும்,சிரத்தையுடனும் அனுஷ்டிப்பது நற்பேற்றினை அளிக்கும்." என்றார்.

கதாசாரம்
தந்தையிடம் மகன் கொள்ள வேண்டிய பாசம், பக்தி, தந்தைக்காக ஆற்ற வேண்டிய கடமை மற்றும் தன் நலம் கருதாமல், பிறர் நலனுக்காக புண்ணியத்தை அர்ப்பணித்தல் என உயர்ந்த உபதேசங்களை உள்ளடக்கியது இவ்விரத மஹிமை. ஏகாதசி விரதம் கடைபிடிப்பதால், விரதம் இருப்பவர் மட்டுமின்றி அவரின் பித்ருக்களும் நற்பலனை அடைகின்றனர். தன் சகோதரர், சகோதரர், சகோதரி, நண்பர், உற்றார், உறவினர் என்று விரத பலனை சங்கல்பம் செய்து அர்ப்பணித்தால், அவர் தனது பாபங்கள், கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவார். எவர் ஒருவர், தெய்வத்தை தனது தாய்- தந்தையாரிடம் காண்கிறாரோ, அவர், பகவான் விஷ்ணுவின் எல்லையில்லா அருட்கருணையால் அனைத்து அபிலாஷைகளும் நிறைவேறப் பெற்று, ஆனந்த வாழ்வு பெறுவார்.


ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம

தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -  உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - அஜா - அன்னதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,  ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.


No comments:

Post a Comment